காதல் ஏற்கப்படாததால் ஏமாற்றம்- மூதாட்டியைக் கொலை செய்த ஆடவன்

Man who murdered old woman- disappointed that love was not accepted

காதல் ஏற்கப்படாததால் ஏமாற்றம்- மூதாட்டியைக் கொலை செய்த ஆடவன்

போர்ட்டிக்சன், மே 31- மூதாட்டி ஒருவரைப் படுகொலை செய்த
சந்தேகத்தின் பேரில் 45 வயதுடைய நபர் ஒருவர் போலீசார் கைது
செய்துள்ளனர். இந்த கொலைச் சம்பவம் இம்மாதம் 9ஆம் தேதி 8வது
மைல், பந்தாய் தெலுக் கெமாங் சாலையிலுள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்தது.

இந்த கொலையில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் ஆடவர்
ஜெலுபு, கோல கிளாவாங்கில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 10ஆம் தேதி
பின்னிரவு 12.05 மணியளவில் கைது செய்யப்பட்டதாக போர்ட்டிக்சன்
மாவட்டப் போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அய்டி ஷாம் முகமது
கூறினார்.

இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து “திடீர் மரணம்“ என
வகைப்படுத்தப்பட்டிருந்த அந்த 67 வயது மூதாட்டியின் இறப்பு குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் படுகொலை என மாற்றப்பட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

அந்த சந்தேகப்பேர்வழியிடமிருந்து கைப்பேசி ஒன்று கைப்பற்றப்பட்டதாகக் கூறிய அவர், ஏற்கப்படாதக் காதல் கோரிக்கையே இந்த கொலைக்குக் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கை நெகிரி செம்பிலான் மாநிலத் துணை சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டு குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவு மற்றும் குற்றவியல் சட்டத்தின் 411வது பிரிவின் கீழ் வழக்கு தொடர அனுமதி
வழங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

www.myeelicham.com Generation Young News Potal / You Tube myvelichamtv